TamilsGuide

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் -சுனில் ஹந்துன்நெத்தி

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றுள்ள நிலையில், இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஜனாதிபதி பதவிக்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இந்த நாட்டு மக்கள் காண மாட்டார்கள்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் அரசியல் உறுதிப்பாடுடைய ஒருவரே தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றம்  கலைக்கப்படுவது  தொடர்பில்  விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், பிரஜைகளின் அங்கீகாரத்துடனும் உதவியுடனும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
 

Leave a comment

Comment