TamilsGuide

சமூகவலைதளங்களில் அவதூறு - நடிகை ரீமா கல்லிங்கல் கொச்சி போலீசில் புகார்

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த திரைப்பட நடிகை ரீமா கல்லிங்கல். 2009-ம் ஆண்டு வெளியான "ருது" என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் 'யுவன் யுவதி', 'சித்திரை செவ்வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் போதை விருந்து நடத்தியதாக அவர் மீது சமுகவலைதளங்கள் மூலமாக பிரபல பின்னணி பாடகி சுசித்ரா குற்றம்சாட்டினார். நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாகவும், அதில் இளம்பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டதாகவும், போதை விருந்து நடத்தியதால் தான் அவரது சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னணி பாடகி சுசித்ராவின் இந்த குற்றச்சாட்டை நடிகை ரீமா கல்லிங்கல் மறுத்தார். பாடகி சுசித்ரா ஆதாரம் இல்லாமல் தன் மீது புகார் கூறியிருப்பதாகவும், அவர் கூறியது போன்று எதுவும் நடக்கவில்லை எனவும், அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் மலையாள திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் தெரிவிப்பேன் என்றும் நடிகை ரீமா கல்லிங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக கொச்சி போலீசில் புகார் செய்திருக்கிறார். நடிகை தனது புகாரை கொச்சி துணை போலீஸ் கமிஷனரிடம் ஆன்லைன் மூலமாக கொடுத்திருக்கிறார்.

அவர் தனது புகாரில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், சமூகவலைதளங்கள் மூலமாக தனது இமேஜை அழிக்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருக்கிறார்.

நடிகை ரீமா கல்லிங்கல் அளித்துள்ள புகார் மீது விசாரணை நடத்துமாறு எர்ணாகுளம் போலீஸ் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகையின் புகார் மனுவை பெற்றுக் கொண்ட அவர், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

நடிகை ரீமா கல்லிங்கல்லின் இந்த புகார் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

Leave a comment

Comment