TamilsGuide

தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள்... ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்றார். ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெயம் ரவியிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

நான் எடுத்த விவாகரத்து முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் வேறுவழியில்லை. இது எனது வாழ்க்கையில் ஒரு வேகத்தடை மாதிரிதான். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே கோர்ட்டுக்கு சென்றுவிட்டேன். அப்போதே விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கிசுகிசுக்கள் வந்தன.

நான் எடுத்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று அவர்கள் சொல்வது தவறாக தோன்றுகிறது. அதில் லாஜிக்கும் இல்லை. ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை பெற்றுக்கொண்டதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது. அவர்கள் தரப்பில் பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது.

இவ்வளவு நடந்த பிறகும் எனக்கு தெரியாது என்று சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. தெரியாமல் எப்படி இருக்க முடியும். எனக்கு புரியவில்லை. நான் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்ததாக சொல்வதும் சரியல்ல. எனது மகன்களுடன்தான் இருந்தேன். மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன்.

பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு. அந்த பெண்ணுக்கு அம்மா, அப்பா இல்லை. அவருடன் இணைத்து பேசினால் அது பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அந்த பெண் லைசன்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட். நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரை என்னோடு இணைத்து பேசுவது ரொம்ப தவறு. நான் அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதா என்று புரியவில்லை. ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசினர். அவருக்கு நிச்சயமாகி போய் விட்டார்.

அடுத்து என்னை மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. அம்மா, அப்பா எனது ஆதரவாக இருக்கிறார்கள். நான் ஊதாரித்தனமாக சுற்றுகிற நபர் இல்லை. உண்மை எல்லாம் விரைவில் கோர்ட் மூலம் வெளிவரும்.

நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும். மகன்களுடன் சேர்ந்துதான் இருக்கிறேன். நோட்டீஸ் அனுப்பும் முன்பே முத்த மகனிடம் விஷயத்தை சொன்னேன். காலை உடைத்து கையை உடைத்து எல்லாமே நான் சம்பாதித்தது. மக்கள் கொடுத்தது. எனது இமேஜை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியாது. ஒரு நாள் உண்மை தெரியவரும்போது சாணியை திருப்பி அடிப்பார்கள் என்றார்.

இந்த நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள். எனது விவாகரத்து விவகாரத்தில் யாரையும் இழுக்க வேண்டாம்" என்று ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Leave a comment

Comment