TamilsGuide

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை - விசாரணைகள் ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியிடப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனுமானங்களின் அடிப்படையிலான வினாத்தாள் ஒன்று வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த வினாத்தாளிலிருந்த சில வினாக்கள் அண்மையில் நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாளிலிருந்த சில வினாக்களுக்கு இணையாகவுள்ளதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்கப் பரீட்சை திணைக்களம் தீர்மானித்தது. எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் நேற்று கொழும்பு, அநுராதபுரம், கேகாலை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவொன்று நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில் பரீட்சை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடாளாவிய ரீதியில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றது.

நாடாளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 3 லட்சத்து 23 ஆயிரத்து 879 மாணவர்கள் தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment