TamilsGuide

நடன இயக்குனர் ஜானி கோவாவில் கைது

தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது பற்றி மகளிர் ஆணையத்தின் தலைவியான நெரெல்லி சாரதா கூறுகையில், திரைப்பட துறையில் இது போன்ற வழக்குகளை விசாரிக்க உயர்மட்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும். இந்த வழக்கை மிகவும் தீவிரமாக நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்.

இந்நிலையில் ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து தலைமறைவான ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை தெலுங்கானா போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காவாலா, ரஞ்சிதமே, அரபிக்குத்து உள்பட பல தமிழ் பாடல்களுக்கு நடனம் அமைத்தவரும் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டவருமான ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டிருப்பது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment