TamilsGuide

வாக்குகள் எண்ணும் பணிக்கான நேரம் அறிவிப்பு- நிராகரிக்கப்படும் வாக்குகள் குறித்து விளக்கம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வாக்களிப்பு அலுவலகங்களையும் அகற்றுவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதான அலுவலகமும், பழைய ஆசனத்திற்கு ஒரு அலுவலகமும் மாத்திரமே திறக்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.

முன்னர் நிறுவப்பட்ட மற்றைய அனைத்து அலுவலகங்களையும் அந்தந்த வேட்பாளர்கள் அகற்ற வேண்டும் என்றும், அகற்றாவிட்டால் பொலிஸாரால் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி மாலை 04.15 மணியளவில் ஆரம்பமாகும் என்றும், எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பிரதான வாக்குகளை எண்ணும் பணிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்டும் எனவும்  தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டதோடு, ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பத்தை எவ்வாறு சரியாகக் குறிப்பிடுவது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க, வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன் பகுதியில் ‘1’ என்ற எண்ணைக் குறிக்க வேண்டும்.

‘2’ மற்றும் ‘3’ என்ற எண்களை குறியிட்டு, தனக்கு விருப்பமான மற்ற வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமை அளிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு வேட்பாளருக்கு எக்ஸ் ‘X’ எனும் குறியீட்டை மட்டும் இட்டும் வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்படும் விருப்பத்தேர்வுகள்

எந்த வேட்பாளருக்கும் எந்த வாக்கும் குறிக்கப்படாதபோது;

ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகள் குறிக்கப்படும் போது;

ஒரு வேட்பாளருக்கு ‘1’ மற்றும் மற்றொரு வேட்பாளருக்கு ‘X’ இடப்பட்டால்;

இரண்டாவது விருப்பம் அல்லது மூன்றாவது விருப்பம் மட்டுமே குறிக்கப்படும் போது;

வாக்காளர் உங்களை அடையாளப்படுத்தும் ஏதாவது எழுதப்பட்டு அல்லது வரையப்பட்டால்;

‘2’ மற்றும் ‘3’ ஆகியவை ‘1’ தவிர வேறு ஒரு குறியுடன் முன்னுரிமையாகக் குறிக்கப்படும் போது;

வாக்குகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் 1, 2, 3 க்கு மேல் குறிக்கப்படும் போது; நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கருதப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment