TamilsGuide

சினிமா பட பாணியில் லாரியை மடக்கி பிடித்த நடிகை நவ்யா நாயர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பட்டணங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேசன். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு டிரெய்லர் லாரி வந்தது.

அந்த லாரி சைக்கிளில் சென்ற ரமேசன் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இருந்த போதிலும் அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. இந்நிலையில் அந்த வழியாக நடிகை நவ்யா நாயர் தனது காரில் வந்தார்.

அவர் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றதை பார்த்தார். அவர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த லாரியை தனது காரில் பின் தொடர்ந்தார். காரின் ஹாரனை அடித்து லாரியை நிறுத்துமாறு சிக்னல் கொடுத்தார்.

ஆனால் லாரி டிரைவர், லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இருந்தபோதிலும் நடிகை நவ்யா நாயர் விடாமல் வெகுதூரம் துரத்திச்சென்று அந்த லாரியை மடக்கினார்.

இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்திவிட்டார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நடிகை நவ்யா நாயர் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு பட்டணங்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தெரசா மற்றும் போலீசார் சென்றனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

லாரி மோதியதில் படுகாயமடைந்த ரமேசனை நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தங்களின் வாக னத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். முதலில் துறவூர் தாலுகா ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது .

பின்பு மேல் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் ரமேசன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை துணிச்சலாக காரில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்த நடிகை நவ்யா நாயரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.
 

Leave a comment

Comment