TamilsGuide

தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.

யாழில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கோாிக்கை விடுத்துள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது.

மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம். ஆனால் சிலர் சங்கு சின்னத்துக்கு வாக்களித்த பின்னர் விரும்பிய மற்றைய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறு கின்றனர். இது எனதோ இப்பொதுக் கட்டமைப்பை சார்ந்தவர்களுடைய கருத்தோ இல்லை.

தற்போதைய நிலவரப்படி எவருமே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதானல் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.

நல்லூர் திருவிழாவிற்கு காப்புக்கடை போடுவது போன்று, கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இனிப்பு கடை போடுவது போன்று, வடக்கு கிழக்கில் வந்து தங்கி பிரச்சாரம் செய்கின்றனர்.

அவர்களுக்கு முகவர்களாக சில தமிழர்கள் செயற்படுகின்றனர். எமது இனத்திற்காக அவர்கள் சிந்தித்து சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்க முன் வரவேண்டும்” என அரியநேந்திரன் மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment