TamilsGuide

நிறைவேற்று அதிகாரத்தை ரணில் தான்தோன்றித்தனமாக பயன்படுத்தினாா் – சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலை பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதென உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்பதாவது மக்கள் வெற்றிப் பேரணி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மொறட்டுவை சொய்சாபுர விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கருத்தத் தொிவித்த சஜித் பிரேமதாச,

”ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் அவர்களின் சுய இலாபத்திற்காக வங்குரோத்து அடைந்த நாட்டிலிருந்து, தேசிய வளங்களையும் சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர்.

நான் என்கின்ற மமதையுடன் ஆட்சி யுகம் ஒன்றை ஏற்படுத்தி தனது அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அதிகபட்ச தந்திரங்களை ரணில் பயன்படுத்தியுள்ளார்.

அரசியல் யாப்பு விதிமுறைகளை மீறி, நிறைவேற்று அதிகாரத்தை தான்தோன்றித்தனமாக பயன்படுத்தியுள்ளார்.

எனவே இந்த இருண்ட யுகத்தை தோல்வி அடையச் செய்து, பொது மக்களுக்கான புதிய யுகத்தை நோக்கி செல்வதற்கு
ஒன்றிணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

தற்போது இந்த அரசியலில் தலைகள் இடம் மாறிக் கொண்டிருக்கின்றன.பணத்துக்காகவும், தரகுத் தொகைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும், மதுபானசாலைக்கான உரிமத்திற்காகவும், தமது சுய கௌரவத்தை இழக்கின்ற
ஒரு அரசியல் கலாச்சாரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நான் எடுத்த தீர்மானம் சரியானது என்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய தீர்ப்பு எதை குறிக்கின்றது.

இந்த தன்னிச்சையான தான்தோன்றித்தனமான தீர்மானத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்.

நிதி அமைச்சராக அவர் மக்களின் அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது” என சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டாா்.
 

Leave a comment

Comment