• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனது ஆட்சியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்

இலங்கை

“நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்புச் சட்டமொன்று தமது அரசாங்கத்தில் உருவாக்கப்படுமென” தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அக்குறணையில் நேற்றிரவு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் கடந்த கால வரலாற்றில் ஒன்றுக்கொன்று எதிராக அரசாங்கங்களே மாறி மாறி ஆட்சி அமைத்திருந்தன.

2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல் பிரசாங்களின் போது
வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கோசங்களையே பிரதானமாக முன்வைத்தனர்.

வடக்கிற்கு எதிரான அரசாங்கமாகவே தெற்கு அரசியல்வாதிகள் செயற்பட்டனர். அவ்வாறான அரசாங்கமே கடந்த காலத்தில் ஆட்சி பீடங்கள் ஏற்றியிருந்தன. 2019ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கம் அமைக்கப்பட்டது.

அளுத்கம, திகன ஆகிய சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இதன் பின்னர் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க முஸ்லீம் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்தது.

நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு எதிராக அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் ஒற்றுமையை உருவாக்க முடியாது. எனவே நாட்டில் முதன்முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை வழங்ககூடிய ஐக்கிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

சஜித்திடம் தற்போது சென்றவர்களில் பலர் எமது வாசற் கதவுகளையும் தட்டியிருந்தனர்.
ஆனால் நாங்கள் அவர்களை உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. எங்களுக்கு அவர்கள் எவரும் தேவையில்லை. எங்களிடம் கொள்கை ரீதியான அரசியல் உள்ளது. எங்கள் மேடையில் இருப்பவர்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிப்பவர்கள், ஒரு அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை எப்போதும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

அலி சாஹிர் மவ்லானா, சுரேஷ் வடிவேல் ஆகியோருக்கு இப்போது அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சர்களை மாத்திரமே உள்ளடக்கவுள்ளோம்.

கடந்த காலத்தில் அனைத்து அரசாங்களிலும் மாறி மாறி அங்கம் வகித்த எவருக்கும் எமது அரசாங்கத்தில் அனுமதி இல்லை” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply