• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகாராஜா படத்தை தவறவிட பாக்யராஜ் தான் காரணமா? - நடிகர் சாந்தனு விளக்கம்

சினிமா

குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது.

நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.

மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், மகாராஜா படத்தில் நடிக்க முதலில் சாந்தனுவை அணுகியதாக அப்பட இயக்குநர் நித்திலன் தெரிவித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இதனையடுத்து, மகாராஜா படத்தை சாந்தனு தவறவிட பாக்யராஜ் தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததிற்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. என்னை முதலில் இந்த கதைக்கு தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானோ காரணம் இல்லை. அப்பாவிற்கு இயக்குநர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது. அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply