TamilsGuide

IMF நிபந்தனைகளை மீறிய ஜனாதிபதி ரணில் – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது அவற்றை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அரச பணியாளர்களுக்கான சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது 17,000 ரூபாவாகவுள்ள அரச பணியாளர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவே 25,000 ஆக அதிகரிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொருளாதாரம் மீட்சியை அடைந்து வரும் சந்தர்ப்பத்தில் அரச பணியாளர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாதெனக் கூறிய ஜனாதிபதி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகின்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரின் அந்த மாற்றம், தற்போது அவருடன் இணைந்துள்ள சிலரின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறதா? என்பது தெரியவில்லை என்பதுடன், ஜனாதிபதி பொறுப்புடன் கூறிய கருத்துக்களை தற்போது பொறுப்பற்ற விதத்தில் கூறி வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் திருத்தப்பட வேண்டும் என ஆரம்பம் முதல், ஐக்கிய மக்கள் சக்தி கூறி வந்த நிலையில் அதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொள்ள முன்வந்துள்ளமையை வரவேற்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment