TamilsGuide

பெர்லின் டூ ராஜாக்கூர் - கொட்டுக்காளியின் பயணம் சூரி நெகிழ்ச்சி பதிவு

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இதுக்குறித்து பெர்லின் டூ ராஜாக்கூர் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை சூரி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ராஜாக்கூர் மக்களுடன் ஒரு திருவிழாப்போல் கொண்டாடி மக்களுடன் கொட்டுக்காளி டிரைலரை ஒளிப்பரப்பினர்.

உலகின் தலைச்சிறந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை கொண்ட #கொட்டுக்காளி க்கு எங்க ராஜாக்கூர் மக்களின் மரியாதை!

மதுரை மண்ணின் கதையில் அதன் அசல் மனிதர்களையே நடிக்க வைத்து, உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் அந்த ஊர் மக்களை பிரமிக்க வைத்த கொட்டுக்காளி, நம் சொந்த மண்ணின் மக்களின் ஆசி கோரி வந்த தருணம்!

எந்த ஒரு விழாவிற்கும் விருதுக்கும் இணையான தருணம் இது!

இறைவனுக்கும் ராஜாக்கூர் மக்களுக்கும் நன்றி! என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment