• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரணிலுக்கு, சிலிண்டர் கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்

இலங்கை

“சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்” என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த போதே ஆசு மாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக வரிசையில் இருந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார்.
அத்துடன் எரிவாயு பிரச்சினைக்கும் தீர்வை பெற்றுக்கொடுத்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த மகத்தான பணிக்கு இறைவனின் ஆசிர்வாதமாகவே
அவருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருக்கிறது.
சமையல் எரிவாயு வரிசையின் நினைவுகளுடன் சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச்செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்க முக்கியமாகும். ரணில் இல்லை என்றால் சமையல் எரிவாயு இல்லை.

அந்தளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மக்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறது.
ரணில் விக்ரமசிங்க இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் எவ்வாறு சமையல் எரிவாயு வரிசை உள்ளிட்ட ஏனைய வரிசை யுகத்துக்கு தீர்வு கண்டிருந்தார்.

அதேபோன்று மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார சுமைக்கும் தீர்வுகாண்பார் என நம்பிக்கை உள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒருசில வேலைத்திட்டங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் பயனாகவே அஸ்வெசும போன்ற நிவாரண திட்டங்களை வழங்கி வருகிறோம்.ரணில் இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை மக்கள் தேர்தலில் காட்டுவார்கள்” இவ்வாறு ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளளார்.
 

Leave a Reply