• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை சமகால அடிமைத்தனமென விமர்சித்த ஐ.நா.

கனடா

ஐக்கிய நாடுகள் சபை (United Nations) கனடாவின் தற்காலிக தொழிலாளர் திட்டத்தை 'நவீன அடிமைத்தனத்தின் ஓர் உருவம்' என்று சாடியுள்ளது.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா தனது ஆய்வின் இறுதி அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை தற்காலிகமாக வேலைக்கு சேர்க்கும் திட்டம், நீண்ட காலமாக விவசாயத் துறையில் முதலிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, குறைந்த சம்பளத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகமாக அனுமதிக்கப்படுவதால் இது புதிய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், குறைந்த சம்பளத் திட்டத்தின் கீழ் 28,730 பேரை அரசு அனுமதித்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டில் இருந்ததை விட 25% அதிகம் ஆகும்.

மேலும், இது 2016-ஆம் ஆண்டிலிருந்து பதிவான மிக உயர்ந்த காலாண்டு எண்ணிக்கையாகும்.

இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்கள் அடையாள ஆவணங்களை பறிமுதல் செய்யப்படுதல், குறைவான சம்பளம் வழங்குதல், உடல்தொல்லைகள், மனஅழுத்தம், அதிக வேலை நேரம் போன்ற பல்வேறு துன்பங்களை எதிர்கொள்கிறார்கள்.

பெண்கள் பாலியல் தொல்லைகள், சுரண்டல் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்கிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் திறந்த வேலை அனுமதிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்றாலும், நடைமுறையில் இது பலருக்கும் சாத்தியமில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) பிரதமரான காலத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இது குறைந்த சம்பளத் தொழிலாளர்களை கொண்டுவருவதால், கனடியர்களுக்கான வருமானம் குறைவதற்கும் வேலை வாய்ப்புகள் குறைவதற்கும் காரணமாக இருந்தது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply