சிரியாவில் நிலநடுக்கம் - மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது. இது 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
ஹமா மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில் நலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் 3.7 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இது இருக்கலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.