• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. 

சினிமா

இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்.
அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்! நாடகம் என்பது வெறும்பக்தி, காதல், புராணம் என்றிருந்ததை, பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை அள்ளி தெளித்தது ராதாதான்..!.
எல்லா மூடநம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து தனி மனித ஒழுக்கமே முக்கியம் என்பதை ‘ரத்தக்கண்ணீர்’ என்ற ஒரேயொரு படத்தின் மூலம் சொல்லிச் சென்ற நடிகவேள் எம்.ஆர்.ராதாவை அந்தக் காலத்து ஆசாமிகள் மட்டுமல்ல இந்தக் காலத்து இளைஞர்களும் மறக்கமுடியாது.... அந்த ரத்தக்கண்ணீர் சினிமாவில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள் தெரியுமா?
ரத்தக்கண்ணீர் நாடகத்தை கிட்டத்தட்ட, 5,000 தடவைக்கு மேல், மேடையேற்றியிருக்கிறார் ராதா. மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற, 'ஸ்கிரிப்ட்!' அதை திரைப்படமாக்க எல்லாருக்கும் ஆசையிருந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ராதாவுக்கு அப்போது சினிமாவில் விருப்பம் இல்லை. ஸ்கிரிப்டை வைத்து வேறு யாரையாவது போட்டு படமெடுக்கலாம் என்றால், யார் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முன் வருவர்? அப்படியே நடித்தாலும் ராதாவைப் போன்று நடிக்க முடியுமா?
அப்பொழுதுதான் நேஷனல் பிக்சர்ஸ், பி.ஏ.பெருமாள், ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படத்தில் நடிக்க ராதாவைத் தேடி வந்தார்.
'சினிமாக்காரங்க பழக்கத்தை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. இப்போ நீங்க விரும்பிக் கூப்பிடறீங்க; வரேன். ஆனா, என் வழி, தனி வழின்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்....' என்றார்.
எல்லாத்தையும் தெரிஞ்சு தான் வந்திருக்கேன்; என்ன செய்யணும் சொல்லுங்க?' என்று கேட்டார் பெருமாள்.
'சினிமாவுக்காக நாடகத்தை விட மாட்டேன்; எனக்கு நாடகம் தான் பெரிசு. ஒற்றை வாடைத் தியேட்டர்ல என் நாடகம் தொடர்ந்து நடக்கும். அது, முடிஞ்ச பிறகுதான் என்னால படப்பிடிப்புக்கு வர முடியும்; சம்மதமா...' என்றார் ராதா.
அதுக்கென்ன; தாராளமா வைச்சுக்கலாம்...' என்றார் பெருமாள்.
நான் நாடக நடிகன். கேமராவின் இஷ்டத்துக்கு திரும்பத் திரும்ப நடிக்க மாட்டேன்; என் இஷ்டத்துக்கு தான் கேமரா என்னை படம் பிடிக்கணும். என்ன சொல்றீங்க...'
சரி...'

சமீபத்துல வாசன், கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு லட்ச ரூபா சம்பளம் கொடுத்திருக்காரு; எனக்கு நீங்க, 25 ஆயிரம் கூடுதலாப் போட்டு ஒண்ணே கால் லட்சமாக கொடுத்துடுங்க...' என்றார். 
அதுக்கென்ன... தாராளமா செஞ்சுட்டாப் போச்சு...'எல்லாவற்றுக்கும் சம்மதித்தார் பெருமாள்.
இதையடுத்து 1952-இல் நேஷனல் பிக்சர்ஸ் அளிக்கும், 'ரத்தக்கண்ணீர்' என்று, செய்தித்தாள்களில் விளம்பரம் வந்தது. உடனே, 'இதுவரை படமாக்கப்பட்ட நாடகங்களில் பல, தோல்வியடைஞ்சு இருக்கு; இது என்ன ஆகுதுன்னு பாக்கலாம்...'என்று, எதிர்மறை கருத்துகளும் வந்தன. இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில், 1952-இல் பிரகாஷ் ஸ்டுடியோவில், படத் துவக்க விழா நடைபெற்றது. நரசு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு ஆரம்பமானது. கதை, வசனம்: திருவாரூர் தங்கராசு. பராசக்தி’யை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு தான் இந்தப் படத்தையும் இயக்கினார்கள்.
'ரத்தக்கண்ணீர்' படத்தில் எம்.ஆர்.ராதாவை ஆட்டுவிக்கும் பதுமையாக எம்.என்.ராஜம் நடித்திருப்பார். படம் முழுக்க ப்ளாஷ்பேக் என்பதும் அப்போது அதிசயம்தான். 1954-ஆம் ஆண்டு, அக்டோபர் 25-ஆம் தேதி வெளியானது ‘ரத்தக்கண்ணீர்’. இப்படத்தில் எம்.ஆர்.ராதா பேசிய ‘அடியே காந்தா...’ வசனம் 70 ஆண்டுகள் கடந்தும் பிரபலமாக உள்ளது.

Leave a Reply