• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா இசை தரும் உணர்வை கதிஜா கொடுத்திருக்கிறார் - மின்மினி டிரைலர் விழாவில் மனோஜ் பரமஹம்சா

சினிமா

ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான், கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள 'மின்மினி' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியான ஒரு படமாக 'மின்மினி' அமைந்திருக்கிறது. லாபம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படம் எடுக்கவில்லை. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற ஆசைதான். இளையராஜா இசை தரும் உணர்வை கதிஜா கொடுத்திருக்கிறார். " என்றார்.

நடிகை எஸ்தர், "நான் சின்ன பொண்ணாக இருந்தபோது இந்தப் படத்தில் கமிட் ஆனேன். பல லொகேஷன்ஸ் பல நினைவுகள் இருக்கிறது. ஹலிதாவுக்கு நன்றி. இந்தப் படத்தின் இசை கேட்கும்போது எமோஷனல் ஆகிவிடுவேன். கதிஜா அந்தளவு நல்ல இசையைக் கொடுத்துள்ளார். எனது நண்பர்கள், குடும்பம் என எல்லோரும் 'மின்மினி'க்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மறக்க முடியாத அனுபவமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது".

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான், "இது நடக்கிறது என்று நம்ப முடியவில்லை. இந்தப் படத்திற்காக கடந்த 2022-ல் ஹலிதா மேம் என்னை அணுகினார். அவருக்கும் என் இசை பிடித்திருந்தது. ஹலிதா மேம் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது எனக்கு வேலை செய்ய இன்னும் எளிதாக இருந்தது. ".

இயக்குநர் ஹலிதா ஷமீம், "'மின்மினி' படத்திற்காக ஷங்கர் சார் வரை ரீச் ஆகி இருக்கிறது. குழந்தைகளை சின்ன வயதில் வைத்து படம் எடுத்து பின்னர் அதற்காக காத்திருந்தார்களே அந்தப் படமா என பலரும் கேட்கிறார்கள். இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை. ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களுக்காகக் காத்திருந்தேன். இந்தப் படத்தை நம்பி இத்தனை வருடங்கள் கழித்தும் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், படத்தை வெளியிடுபவர்கள் எல்லோருக்கும் நன்றி. கண்டிப்பாக நீங்கள் படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்ல வேண்டும்" என்றார்.
 

Leave a Reply