• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திலகன் என்னும் மகாநடிகன் -  89 வது பிறந்த தினம் 

சினிமா

அந்த மகா நடிகனை நினைவு கூறுவோம் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாக கூடுவிட்டு கூடு பாய்வதில் திலகன் அசகாயசூரர். தனக்கே உரிய உடல் மொழியையோ, மேனரிஸங்களையோ அவர் உருவாக்கிக் கொண்டதில்லை. கதாபாத்திரம் எதை கோருகிறதோ அதை மட்டும் பிரதிபலித்தவர். கேரளாவில் நடிகர்களை அப்படியே இமிடேட் செய்யும் மிமிக்ரி கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் கிண்டலுக்கு தப்பாத அரசியல்வாதியோ, நடிகனோ அங்கு இல்லை. மம்முட்டியும், மோகன்லாலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர்களை இமிடேட் செய்து கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகள் அரங்கேறும். மிமிக்ரி கலைஞர்களால் மிகக் குறைவாக இமிடேட் செய்யப்பட்டவாகள் திலகனும், நெடுமுடி வேணுவும்தான். இருவருக்கும் பொதுவான மேனரிஸங்கள் என்று எதுவும் இல்லை. இருவரும் கதாபாத்திரங்களாக மாறக் கூடியவர்கள்.

திலகன் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வாழும் சித்திரங்கள் எனலாம். அவரை அகங்காரம் கொண்ட காரணவராகவே பல படங்கள் சித்தரித்தன. அதன் தொடர்ச்சியாகதான் சத்ரியன் படத்தில் அவர் வில்லனாக நடித்ததும். ஆனால் திலகன் எல்லாவித கதாபாத்திரங்களையும் அனாயாசமாக கையாளக் கூடியவர்.

கிரீடம் படத்தில் மகன் ஒரு நல்ல நிலையை எட்ட வேண்டும் என்ற பதைபதைப்புடன் வாழும் தந்தை. அந்த கனவு கண் முன்னால் நொறுங்கிப் போகும் போது அவர் வெளிப்படுத்தும் விரக்தி... திலகனால் மட்டுமே சாத்தியம். லோகிததாஸின் திரைக்கதையில் வந்த கிரீடம் திலகனின் திரைவாழ்க்கையில் மறக்க முடியாத படம். அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோல் படத்தில் நியாய தர்மங்களையும், சுய கௌரவத்தையும் வறுமையின் முன் தொலைத்து மகளை நாடகத்திற்கு என்று சொல்லி விபச்சாரத்துக்கு அழைத்து செல்லும் தந்தையின் கதாபாத்திரம். தனது உண்மை முகம் மகனின் முன்னால் தெரிய வரும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இயலாமையும், பேடிமையும் மலையாள ரசிகன் ஒவ்வொருவரின் மனதிலும் கல்வெட்டாக பதிந்திருக்கும்.

இன்னொரு மறக்க முடியாத தந்தை கதாபாத்திரம் ஸ்படிகம் படத்தில் இடம்பெறுவது. அதில் திலகன் கணக்கே உலகை ஆள்கிறது என்ற விடாப்பிடி கொள்கையுடைய கணக்கு வாத்தியார். அவரிடம் அதிக அடியும் அவமானமும் படுகிற மாணவனாக அவரது மகன் மோகன்லால். மகனின் தொழிலநுட்ப அறிவை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து துன்புறுத்த ஒருகட்டத்தில் மகன் ரவுடியாக மாறுகிறான். தந்தையின் பிடிவாதம் தொடர்கிறது. மகள், மனைவி என ஒவ்வொருவராக அவரைவிட்டு விலக, மெதுவாக மகனின் அருமை தெரிய வருகிறது. கத்திக்குத்துப்பட்டு மகன் மருத்துவமனையில் படுத்திருக்க யாருக்கும் தெரியாமல் மகனைப் பார்க்க திலகன் வருவார். மகனை பார்த்துவிட்டு திரும்புகையில் எதிரில் தெரிந்தவர்களை கண்டதும் சட்டையை சுருட்டிவிட்டு தலையில் துண்டை போட்டு ஒரு நடை நடப்பார். துயரம், அன்பு, பச்சாதாபம் எல்லாம் கலந்த நடை. மகா நடிகனின் நடை.

இறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்புவரை திலகனின் வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருந்தது. அம்மாவுக்கு - அசோஸியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்ட்டிஸ்ட் - எதிராக திலகன் குரல் கொடுக்கத் தொடங்கிய போது பிரச்சனையும் ஆரம்பித்தது. திலகன் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. திலகன் மம்முட்டி உள்ளிட்டவர்களை நேரடியாக தாக்கிப் பேசினார். கூலிங் கிளாஸ் மாற்றுவதெல்லாம் நடிப்பு கிடையாது என்று மம்முட்டியையும் அவரது சமகாலப் படங்களை விமர்சித்தார். திலகன் எப்போதும் அப்படிதான். அவரின் பெருந்தச்சன் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைப்பதாக இருந்தது. கடைசி நேர லாபியில் அது அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. அமிதாப்பச்சன் அந்த வருடத்துடன் நடிப்பை நிறுத்தப் போவதாக ஓய்வை அறிவித்திருந்தார். இதனை திலகன் நேரடியாகவே விமர்சித்தார். அவர் எப்போதும் அப்படிதான்.

அம்மாவுக்கு எதிரான திலகனின் விமர்சனம் கடுமையானது என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் அவரை கூடுதல் கரிசனத்துடன் மலையாள நடிகர்கள் அணுகியிருக்க வேண்டும். திலகனுக்காக இலக்கியவாதிகளும், சில அரசியல்வாதிகளும் பரிந்து பேசியும் தடை நீடித்தது. இந்த காலகட்டத்தில் அவர் மனரீதியாக நொறுங்கிப் போனார். எனக்குத் தெரிந்தது நடிப்பு ஒன்றுதான், அதை என்னால் விடமுடியாது என மீடியாக்களில் அவர் கண்கலங்கியதுண்டு. திட்டமிட்டு என்னை புறக்கணிக்கிறார்கள் என சினந்ததுண்டு. ஒருகட்டத்தில் சினிமா இல்லையென்றால் என்ன என்று நாடகத்தில் நடிக்கச் சொன்றார்.

2011ல் தடை நீங்கியது. அதற்கு முன்பே இயக்குனர் ரஞ்சித் அவரை தனது இந்தியன் ருப்பீயில் ஒப்பந்தம் செய்திருந்தார். திலகன் என்ற நடிகனுக்கு அதில் நல்ல தீனி கிடைத்தது. வயதானாலும் தானொரு மாஸ்டர் என்பதை அந்தப் படத்தில் அவர் நிரூபித்தார். ஏறக்குறைய பிருத்விராஜுக்கு இணையான வேடம். பிருத்விராஜின் தங்கையை பெண் பார்க்க வருகிறவர்களிடம் வரதட்சணை குறித்து திலகன் பேசும் காட்சி ஒன்று இந்தியன் ருப்பீயில் வருகிறது. ஒரு சில நிமிடங்கள் வரும் அந்தக் காட்சி திலகன் என்ற நடிகனால் உச்சபட்ச அதிர்வை நம்முள் உண்டாக்கும். அதுதான் திலகன்.

இந்தியன் ருப்பீ படத்துக்குப் பிறகு இயக்கிய ஸ்பிரிட் படத்திலும் ரஞ்சித் திலகனை நடிக்க வைத்தார். திலகனுக்கு ஏற்ற கதாபாத்திரம் அந்தப் படத்தில் இல்லை. ரஞ்சித் திலகனுக்கென்றே ஒரு குடிகார ஆசானை உருவாக்கினார். இதப்பாருடா என்று திலகன் தனது கையில் கட்டியிருக்கும் வாட்சை உயர்த்திக் காட்டும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கிறது.

திலகன்... நீங்கள் உங்களின் முழு ஜீவிதத்தை எங்களுக்காக தந்தீர்கள். உங்கள் நடிப்பால் எங்களை கண் கலங்க வைத்தீர்கள், சினங்கொள்ளச் செய்தீர்கள், நெகிழ்ச்சியுடன் உருக வைத்தீர்கள். கடுவா சாக்கோ மாஸ்டரும், அச்சுதன் மேனனும், பெருந்தச்சனும், கரீமும், கே.சி.பிரான்சிஸும், ஆசானும் நித்தியத்துடன் எப்போதும் ஜீவித்திருப்பார்கள். கலைஞனுக்கு என்றும் மரணமில்லை.

Sampatth Kumar

Leave a Reply