TamilsGuide

சூர்யா 49-வது பிறந்தநாள்.. ரத்ததானம் செய்த நடிகர் சூர்யா- குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சூர்யா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளது. மேலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 500 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் படங்களை தொடர்ந்து கூடிய விரைவில், இந்தி படங்களிலும் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளராகவும் களமிறங்கிவிட்டார். இவர் தயாரிப்பில், அக்ஷய் குமார் நடிப்பில் 'சூரரை போற்று' படத்தின் ரீமேக்காக வெளியான சர்பராஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா, தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அதாவது ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என, கடந்த ஆண்டு சூர்யா எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, இப்போது இரத்த தானம் செய்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் 49-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார். கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கிய நிலையில் அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
 

Leave a comment

Comment