TamilsGuide

சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் பதற்றநிலை – ஒருவர் கைது

யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த பதற்றத்தையடுத்து ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வைத்தியருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுக்கூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது.

இந்நிலையில் 08ஆம் திகதி , நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா, தான் விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் எனவும் கூறிச் சென்றார்.

வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதனை அடுத்து மறுநாள் 09ஆம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால் , வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு,பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் விடுமுறையில் சென்ற தான் விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளேன் என முன்னாள் பதில் அத்தியட்சகர், பதில் அத்தியட்சகருக்கு உரிய அறையில் அமர்ந்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால் , பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடிய வேளை பொலிஸார் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதன் போது, நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment