TamilsGuide

திருகோணமலையில் வர்த்தகர் வாகனத்துடன் எரித்துக் கொலை

திருகோணமலை, மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் வர்த்தகர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய ஆண் வர்த்தகரே இவ்வாறு எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த வர்த்தகர் பயணித்ததாக கூறப்படும் வாகனம் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வில்கம் விகாரைப்பகுதியைக்  கடந்து பயணித்துள்ளமை அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த வாகனம் மொராவௌ பகுதிக்கு திரும்பாத நிலையில் பொலிஸார் காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே பன்மதவாச்சி காட்டுப் பகுதியில், வர்த்தகர் பயணித்ததாகக்  கூறப்படும் வாகனத்துடன் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment