TamilsGuide

ஆளுக்கு 10 கிலோ... இயற்கை உபாதைகளை சேர்த்துவைக்க வடகொரிய ஜனாதிபதி கோரிக்கை

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு மக்களிடம், ஆளுக்கு 10 கிலோ மலத்தை சேர்த்துவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே தென்கொரியாவுக்கு பலூன்கள் மூலம் மனிதக்கழிவுகள் மற்றும் குப்பைகளை வடகொரியா அனுப்பிய விவகாரத்தால் அந்நாடு உலக அரங்கில் நாற்றமாய் நாறிப்போன நேரத்தில் இப்படி ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஒருவேளை அந்த செய்திக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

என்றாலும், தென்கொரியாவுக்குள் பலூன்கள் மூலம் மனிதக்கழிவுகள் அனுப்பப்பட்டதற்கும் இப்போது தன் நாட்டு மக்கள் அனைவரும், தங்கள் சொந்த மலத்தில் ஆளுக்கு 10 கிலோ சேர்த்துவைக்குமாறு கிம் கேட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை!

அதாவது, பொதுவாகவே வடகொரியாவில் குளிர்காலத்தில் இப்படி ஒரு வழக்கம் உண்டாம்.

அது எதற்காக என்றால், மனிதக்கழிவுகளை உரமாக்கி பயிர்களுக்கு இடுவதற்காகவாம். அதுவும் இப்போது இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கு வடகொரியாவில் தட்டுப்பாடு நிலவுகிறதாம்.

ஆகவேதான், தன் நாட்டு மக்கள் அனைவரும் தத்தம் கழிவுகளை சேகரித்து, கோடையில் தங்கள் வயலுக்கு அவற்றை உரமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளாராம் கிம்.

இப்படி தங்கள் வீட்டுத் தோட்டத்தில் கோடைக்காலத்தில் மலத்தை காயவைக்கவேண்டியுள்ளதே என வடகொரிய மக்கள் முறுமுறுக்கிறார்களாம்.

என்றாலும், யாருக்கெல்லாம் ஆளுக்கு 5,000 வோன் அதாவது, சுமார் 4.50 பவுண்டுகள் சேர்க்கமுடியுமோ, அவர்கள் இந்த மோசமான உத்தரவிலிருந்து தப்பிக்க விதிவிலக்கும் உள்ளது. ஆனால், 5,000 வோன் என்பது வடகொரியாவில் பலருக்கும் பெரிய தொகை ஆகும்.

இதற்கிடையில், வடகொரியாவிலிருந்து பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்ட மண்ணை ஆய்வகங்களில் பரிசோதனை செய்தபோது, அதில் உருளைப்புழுக்கள், சாட்டைப்புழுக்கள் மற்றும் ஊசிப்புழுக்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

அதாவது, வடகொரிய மக்கள் மனித மலத்தை உரமாக பயன்படுத்துவதால் மன்ணில் இந்த புழுக்கள் (parasites) காணப்படலாம் என தென்கொரியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment