TamilsGuide

பொலிவியாவில் ஆட்சியை கவிழ்க்கும் சதி முறியடிப்பு- ராணுவ தளபதி கைது

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபராக லூயிஸ் ஆர்ஸ் உள்ளார். இந்த நிலையில் அங்கு ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா திடீரென்று ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது உத்தரவின்பேரில் ராணுவத்தின் சில பிரிவினர் ராணுவ புரட்சிக்கு முயன்றனர்.

அதிபர் மாளிகை, பாராளுமன்றம் அமைந்துள்ள பிளாசா முரில்லோ வரலாற்று சதுக்கத்தில் ராணுவ வீரர்கள், டாங்கிகள் குவிக்கப்பட்டன. இதில் ஒரு டாங்கி மூலம் அதிபர் மாளிகையின் கதவை உடைக்க முயன்றனர். அதேபோல் அரசு கட்டிடங்களும் முற்றுகையிடப்பட்டன.இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

இதுதொடர்பாக ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கூறும்போது, ஜனநாயகத்தை ஆயுதப் படைகள் மறுசீரமைக்க விரும்புகின்றன. அதை உண்மையான ஜனநாயகமாக மாற்ற விரும்புகின்றன. நாங்கள் எங்கள் தாயகத்தை மீட்டெடுக்கப் போகிறோம். அதிபர் லூயிஸ் ஆர்சை மதிக்கிறேன்.

அதேவேளையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும். சிறையில் உள்ள முன்னாள் தலைவர் ஜீனைன் அனெஸ் உட்பட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றார். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ வீரர்கள் பின்வாங்கினர். ராணுவ டாங்கிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அதன்பின் சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிபர் லூயிஸ் ஆர்ஸ் கூறும்போது, பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணிதிரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு முறை, பொலிவியர்களின் உயிரைப் பறிக்கும் சதி முயற்சிகளை நாம் அனுமதிக்க முடியாது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒரு தேசிய அணி திரட்டலுக்கு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றார். ராணுவ தளபதி ஜூனிகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

பொலிவியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா, பிரேசில்,சிலி, ஈக்வடார், பெரு, மெக்சிகோ, கொலம்பியா,வெனிசுலா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 

Leave a comment

Comment