TamilsGuide

அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுவதாக மீனவ சங்கங்கள் குற்றச் சாட்டு

இலங்கைக் கடற்படை  வீரர் உயிரிழந்த சம்பவமானது அரசாங்கத்தின் அசமந்த போக்கினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மீனவமக்கள் தொழிற்சங்கத்தின் வடக்குமாகாண இணைப்பாளர் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம்  நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவர் இதனைக்  குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களைக்  கைது செய்வதற்கு முயன்ற இலங்கை கடற்படை உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் கவலைக்குரிய விடயமாகும்.

இவ்விடயத்தில் அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவ படகினை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் வழிமறித்திருந்தனர். இதன்போது படகில் பயணித்த மீனவர்கள் கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு முகாமில் பணியாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

மேலும் இந்த சம்பவத்தையடுத்து 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மீனவர்கள் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment