TamilsGuide

ரஷிய அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் வசித்து வரும் இலக்குகளைத் தாக்கியதற்காக ரஷியாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மற்றும் அதன் ராணுவ தளபதி ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

அதன்படி, முன்னாள் பாதுகாப்பு மந்திரி செர்கே ஷோய்கு மற்றும் தலைமை தளபதி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

உக்ரைன் நாட்டு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment