TamilsGuide

அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வழங்கிய கட்சிக்கு சரத் பொன்சேகா துரோகம் செய்து விட்டார் – ஐமச

தனது அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வழங்கிய, அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொடுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு சரத்பொன்சேகா துரோகம் செய்வது முறையல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,

‘ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் என்ற ரீதியில், சரத் பொன்சேகாவிற்கு, வழங்கப்பட்டிருந்த கடமைகள், எதிர்கால அரசியல் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்னவென்று கட்சியின் தலைவரால் அவருக்கு மிகத் தெளிவாக வழங்கப்பட்டிருந்தது.

அதற்குமேல் அருக்கு வேறொரு அரசியல் கட்சி, வேறு நோக்கம் வேறு எதிர்பார்ப்புக்களை வழங்கியிருக்கக்கூடும்.

இந்த நாட்டில் மீண்டும் இராணுவத்தில் செயற்பட்ட ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டிய அவசியம் நாட்டு மக்களுக்கு கிடையாது என நினைக்கின்றேன்.

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாட்டை ஒப்படைத்து என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மோசமான, கொள்ளைக்கார அரசியல் தலைவர்களுக்கு அரசியல் ரீதியாக, சட்டப்படி எவ்வாறான தண்டனைகளை வழங்கமுடியும் என்பது குறித்தான பொறுப்பை நாம் சரத் பொன்சேகாவிற்கு, வழங்கியிருந்தோம். அதையும் தாண்டி அவர் என்ன எதிர்பார்க்கின்றார் என்பது தெரியவில்லை.

அவரின் அரசியல் வாழ்க்கையை பாதுகாத்த, அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொடுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு அவர் துரோகம் செய்வது சரியான ஒரு விடயம் அல்ல.’ என தெரிவித்தார்.
 

Leave a comment

Comment