TamilsGuide

உறுமய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில் நடமாடும் சேவை

நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்து கொண்ட ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத் இதனைத் தெரிவித்தார்,

அதன்படி காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல துறைசார் அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக விரைவாக காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக அவர்
தெரிவித்தார்,

இதன்போது காணி உறுதிகளை மக்களுக்கு வழங்குதற்காக சகல அதிகாரிகளும் நடமாடும் சேவையில் பங்கெடுப்பர். உறுதியை பெற்றுக்கொள்ள வருவோர் அவர்களின் பழைய உறுதிகள் அல்லது அனுமதி பத்திரங்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைப்பதை மாத்திரமே செய்ய ​வேண்டும்.

ஏனைய அளவையியல் பணிகள், பதிவுச் செயற்பாடுகள் என்பவற்றை அதிகாரிகள் முன்னெடுப்பர். இந்த சேவையுடன் பதிவாளர் திணைக்களம், அளவையியல் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்துகொள்வர். இதற்காக சிறிதும் பணம் அறவிடப்படாது எனறும் அவர் தெரிவித்தார்,

மேலும் மகாவலி வலயத்திற்குள் வசிக்கும் 280,000 அதிகமானோர் காணி அனுமதிப் பத்திரங்களை கொண்டுள்ளனர் என்றும் மகாவலி வலயத்திற்குள் வசிப்போரின் காணிகளுக்கான நிரந்தர உறுதிகள், உறுமய திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

தற்போதும் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment