TamilsGuide

வெளிநாட்டு மோகம் - ஏமாற்றப்படும் யாழ் இளைஞர்கள்

யாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து, வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய்  வரையில் பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, இந்த வெளிநாட்டு நுழைவு விசா மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் , விழிப்பாகவும் இருப்பது அவசியம்” இவ்வாறு பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும், நுழைவு விசா மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment