TamilsGuide

கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில் சேவைகள்  விரைவில் மீள ஆரம்பிக்கப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கடல் வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள், ரயில் போக்குவரத்து, கடல் போக்குவரத்துச் செயற்பாடுகள், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

தீவுகளுக்கான பயணிகள் போக்குவரத்திற்குரிய படகுச் சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும், இறங்குத் துறைகள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் இதன்போது கூறினார்.

பேருந்து பயணிகள் நாளாந்தம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் அவர் இந்த கூட்டத்தின் போது எடுத்துரைத்தார். இதற்கு அமைய அதற்கான உரிய செயற்பாடுகளை அமுல்படுத்துமாறு மத்திய அமைச்சின் துறைசார் அதிகாரியால், மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கான சமிஞ்சைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், யாழ் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையங்களுக்கு அருகில் போக்குவரத்து முனையங்களை நிறுவுதல் போன்ற விடயங்கள் குறித்தும் ஆளுநர் தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.

போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்திகளை அடைய முடியும் எனவும், சுற்றுலாத்துறைசார் விடயங்களை மையப்படுத்தி போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்துத் துறையை விஸ்தரிப்பது தொடர்பில் கேட்டறிந்துக்கொண்ட மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், கடல் போக்குவரத்தின் அவசியம் மற்றும் தேவை தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அத்தோடு, எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்குள் தண்டவாள புனரமைப்பு நிறைவு செய்யப்பட்டு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment

Comment