ரஜினிகாந்தும், சத்யராஜும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வந்த மிஸ்டர் பாரத் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை நிறுத்தி விட்டனர். சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடிக்க சத்யராஜ் மறுத்து விட்டார். ரஜினிக்கும், சத்யராஜுக்கும் தகராறு என்றும், இதனாலேயே சேர்ந்து நடிக்க மறுக்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில் தற்போது நிருபர்களை சந்தித்த சத்யராஜிடம் ரஜினியுடன் உங்களுக்கு தகராறா? என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறும்போது, "ரஜினிகாந்துடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்குள் தகராறு என்று புரளியை கிளப்பியவர்கள் யார் என்று தெரியவில்லை.
ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மிஸ்டர் பாரத் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம் அமைந்தது. அந்த படத்துக்கு பிறகு ரஜினியுடன் நடிப்பதாக இருந்தால் அதையும் தாண்டி வலுவான கதாபாத்திரமாக இருக்க வேண்டும்.
சிவாஜி, எந்திரன் படங்களில் எதிர்பார்த்த வலுவான கதாபாத்திரம் அமையாததால் நடிக்க மறுத்தேன். வேறு எந்த பிரச்சினையும் இல்லை'' என்றார்.
தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினியும், சத்யராஜும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது.